Pages

Saturday, May 14, 2011

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை !!!




தஜ்ஜால் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புகளை முதலில் அறிந்து கொள்வோம்.



தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை !!!



நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்ட தில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக் கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி),



நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057



ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)



நூல்: முஸ்லிம் 5239



தஜ்ஜாலின் அங்க அடையாளங்கள்.



ஒரு கண் ஊனமுற்றவனாக அவன் இருப்பான். அது எந்தக் கண் என்பதில் இருவிதமான ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.



'நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன். ஆனால் தஜ்ஜாலின் வலக்கண் சுருங்கிய திராட்சையைப் போன்று ஊனமுற்றிருக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)



நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057



'பெரும் பொய்யனாகிய ஒற்றைக் கண்ணனைப் பற்றி எந்த நபியும் தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் இருந்ததில்லை. நிச்சயமாக தஜ்ஜால் ஒரு கண் ஊனமுற்றவன். உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமுற்றவன் அல்லன்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அனஸ் (ரலி),



நூல்: புகாரி 7131,



தஜ்ஜால் என்பவன் இடது கண் ஊனமானவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)



நூல்: புகாரி 3441, 3440, 4403, 5902, 6999, 7026, 7123, 7128, 7407



ஒற்றைக் கண்ணனாக இருப்பவனெல்லாம் தஜ்ஜால் என்று முடிவு செய்து விடக் கூடாது. அவனைப் பற்றி இன்னும் பல அடையாளங்களும் உள்ளன.



ஒரு கண் ஊனமான தஜ்ஜாலின் மற்றொரு அடையாளம் அவனது இரு கண்களுக்கிடையே காஃபிர்' என எழுதப்பட்டிருக்கும். அதை அனைவரும் படிக்கும் வகையில் அந்த எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும்.



தஜ்ஜாலின் கண்களுக்கிடையே காஃபிர்' என்று எழுதப் பட்டிருக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அனஸ் (ரலி),



நூல்: புகாரி 7131, 7404



'எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத எல்லா முஃமின்களும் படிக்கும் விதமாக தஜ்ஜாலின் கண்களுக்கிடையே காஃபிர்' என்று எழுதப்பட்டிருக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),



நூல்: முஸ்லிம் 5223



ஊனமுற்ற கண்ணின் மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமான சதைக் கட்டி ஒன்று தென்படும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.



நூல்: முஸ்லிம் 5223



ஒரு கண் ஊனமுற்றிருந்தாலும் ஊனமடையாத மற்றொரு கண் பச்சை நிறக் கண்ணாடிக் கற்கள் போன்று அமைந்திருக்கும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.



நூல்: அஹ்மத் 20220



இந்த வர்ணனையின் அடிப்படையில் அவனது முகம் கோரமாக அமைந்திருக்கும் என்று தெரிந்தாலும் அவனது உடலமைப்பில் கவர்ச்சியாகவும் சில உறுப்புகள் அமைந்திருக்கும்.



அவன் சிவந்த நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.



நூல்: புகாரி 3441, 7026, 7128



அவன் அதிக வெண்மை நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.



நூல்: அஹ்மத் 2707, 2041



தஜ்ஜாலின் நிறம் குறித்து இரண்டு அறிவிப்புகளும் ஒன்றுக் கொன்று முரண்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் இரண்டுக்கும் முரண்பாடு இல்லை.



ஒருவர் சிவந்த நிறமுடையவராகவும், அதிலும் அதிக சிவப்பு நிறமுடையவராக இருந்தால் அவரைப் பற்றி வெள்ளை நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு. சிவந்த நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு.



உதாரணமாக வெள்ளையர்கள் என்று ஆங்கிலேயர்களை நாம் குறிப்பிடுகிறோம். எந்த மனிதனும் வெள்ளை நிறத்தில் இருக்க முடியாது. சிவந்த நிறத்தைத் தான் இவ்வாறு குறிப்பிடுகிறோம். அது போலவே இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.



திடகாத்திரமான உடலமைப்புடன் இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.



நூல்: புகாரி 3441, 7026, 7128



குறிப்பிட்ட ஒரு மனிதனையே தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்; தீய சக்தியை உருவகமாகச் சொல்லவில்லை என்பதை மேற் கண்ட அடையாளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த அடையாளங்கள் யாவும் அவன் வானத்துக்கும், பூமிக்குமாக பிரம்மாண்டமாகத் தென்படுவான் என்ற கற்பனையையும் நிராகரிக்கின்றன.



தஜ்ஜால் இனிமேல் தான் பிறப்பானா?



தஜ்ஜால் இனி மேல் பிறந்து வரப் போகிறானா? அல்லது முன்பே பிறந்து பிற்காலத்தில் வெளியே வருவானா?



இதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.



தமீமுத்தாரி (ரலி) அவர்கள் கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர். தஜ்ஜாலைச் சந்தித்த விபரத்தை அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்த போது அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.



எனவே அவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே இந்த உலகில் இருந்து வருகிறான் என்பதை நாம் நம்பியாக வேண்டும். அந்த நிகழ்ச்சியில் தஜ்ஜால் பற்றி அதிக விபரங்கள் கிடைப்பதால் அந்த ஹதீஸை முழுமையாகப் பார்ப்போம்.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்பாளர் 'அஸ்ஸலாத்து ஜாமிஆ'' (தொழுகை நடத்தும் நேரம் வந்து விட்டது) என்று அறிவிப்பதைச் செவியுற்று நான் பள்ளிவாசல் சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டு மிம்பரில் அமர்ந்தார் கள். 'ஒவ்வொருவரும் தொழுத இடத்திலேயே இருங்கள்'' என்று கூறிவிட்டு 'நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று நாங்கள் கூறினோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு அச்சமூட்டவோ, ஆர்வமூட்டவோ உங்களை நான் கூட்டவில்லை. தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். அவர் கூறியதாவது:



லக்ம், ஜுகாம் ஆகிய கோத்திரத்தைச் சேர்ந்த முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன். ஒரு மாதம் அலைகளால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில் ஒதுங்கினோம். சிறு கப்பல் ஏறி தீபகற்பத்தில் நுழைந்தோம். அப்போது அதிகமான மயிர்களைக் கொண்ட பிராணி ஒன்று எங்களை எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் இருந்ததால் அப்பிராணியின் மலப்பாதை எது? சிறு நீர்ப்பாதை எது என எங்களால் அறிய முடியவில்லை.



அப்பிராணியிடம் 'உனக்குக் கேடு உண்டாகட்டும்! நீ என்ன பிராணி?'' என்று கேட்டோம். 'நான் ஜஸ்ஸாஸா'' என்று அப்பிராணி கூறியது. 'நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்! அவர் உங்களைப் பற்றி அறிவதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார்'' எனவும் அப்பிராணி கூறியது. அது ஒரு மனிதனைப் பற்றிக் கூறியதும் 'அப்பிராணி ஒரு ஷைத்தானாக இருக்குமோ'' என்று அஞ்சினோம்.



நாங்கள் விரைந்து சென்று அந்த மடாலயத்தை அடைந்தோம். அங்கே பருமனான ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக்கால்களுக்குமிடையே இரும்பினால் கழுத்துடன் தலை சேர்த்து அவன் கட்டப்பட்டிருந்தான். 'உனக்குக் கேடு உண்டாகட்டும். ஏனிந்த நிலை?'' என்று நாங்கள் கேட்டோம்.



அதற்கு அம்மனிதன், 'என்னைப் பற்றி அறிய சக்தி பெற்று விட்டீர்கள். எனவே நீங்கள் யார்? என எனக்குக் கூறுங்கள் என்றான்.''



'நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் பயணம் செய்த போது ஒரு மாதம் கடல் எங்களை அலைக்கழித்து இந்தத் தீபகற்பத்தில் நுழைந்தோம். அடர்ந்த மயிர்களைக் கொண்ட ஒரு பிராணியைக் கண்டோம். அப்பிராணி நான் ஜஸ்ஸாஸா' ஆவேன். இந்த மடாலயத் தில் உள்ள மனிதரைச் சந்தியுங்கள் என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம். அதனால் திடுக்குற்றோம். அது ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம்.'' எனக் கூறினோம்.



'பைஸான் எனுமிடத்தில் உள்ள பேரீச்சை மரங்கள் பலன் தருகின்றனவா?'' என எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். அதற்கு அம்மனிதன் 'விரை வில் அங்குள்ள மரங்கள் பலனளிக்காமல் போகலாம்'' என்றான்.



'தபரிய்யா எனும் ஏரியைப் பற்றி எனக்குக் கூறுங்கள்! அதில் தண்ணீர் உள்ளதா?'' என்று அவன் கேட்டான். 'அதில் அதிகமான தண்ணீர் உள்ளது'' என்று நாங்கள் கூறினோம். 'அந்தத் தண்ணீர் விரைவில் வற்றி விடக் கூடும்'' என்று அவன் கூறினான்.



'ஸுகர் என்னும் நீரூற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரால் விவசாயம் செய்கிறார்களா?'' என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் 'ஆம்! தண்ணீர் அதிகமாகவே உள்ளது; அங்குள் ளோர் அத்தண்ணீரால் விவசாயம் செய்து வருகின்றனர்'' என்றோம்.



'உம்மி சமுதாயத்தில் தோன்றக் கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக் கூறுங்கள்'' என்று அம்மனிதன் கேட்டான். அவர் 'மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் தங்கியிருக்கிறார்'' என்று கூறினோம்.



'அவருடன் அரபுகள் போர் செய்தார்களா?'' என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம்' என்றோம். 'போரின் முடிவு எவ்வாறு இருந்தது?'' என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் 'அவர் தன்னை அடுத்துள்ள அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார்'' எனக் கூறினோம். 'அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லதாகும்'' என்று அவன் கூறினான்.



நான் இப்போது என்னைப் பற்றிக் கூறப் போகிறேன். 'நான் தான் தஜ்ஜால் ஆவேன். (இங்கிருந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். அப்போது நான் வெளியே வருவேன். பூமி முழுவதும் பயணம் செய்வேன். (நான் பயணிக்கக் கூடிய) நாற்பது நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். ஆயினும், மக்கா, மதீனா ஆகிய இரு ஊர்களைத் தவிர. அவ்விரு ஊர்களும் எனக்கு விலக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயலும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு மலக்கு என்னை எதிர் கொண்டு தடுத்து நிறுத்துவார். அவற்றின் ஒவ்வொரு வழியிலும் அதைக் காக்கும் வானவர்கள் இருப்பர்'' என்று அம்மனிதன் கூறினான்.



இதை தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். மேலும் தமது கைத்தடியால் மிம்பர் மீது தட்டி, 'இது (மதீனா) தைபா (தூய நகரம்) இது தைபா; இது தைபா'' எனக் கூறினார்கள். 'இதே விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா?'' என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் 'ஆம்'' என்றனர்.



அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், அல்லது எமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், இல்லை; இல்லை; அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள்.



இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.



நூல்: முஸ்லிம் 5235.



தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பி ருந்தே ஏதோ ஓரிடத்தில் இருந்து வருகிறான் என்பதையும் அவனைப் பற்றிய ஓரளவு விபரங்களையும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.



இஸ்லாத்தை எதிர்ப்பான்.



முஸ்லிம் சமுதாயத்தை வழி கெடுப்பவர்கள் பல வகையினராக இருப்பார்கள். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டே வழி கெடுப்பவர்களும் தோன்றுவார்கள். இஸ்லாத்தை விட்டு வெளி யேறுமாறு கூறி வழிகெடுப்பவர்களும் தோன்றுவார்கள். தஜ்ஜால் என்பவன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவனாக இருப்பான்.



அவன் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க மாட்டான். இஸ்லாத்தின் பால் அழைப்பதாகவும் கூற மாட்டான்.



இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),



நூல்: முஸ்லிம் 5237.



'தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே காபிர்' என்று எழுதப்பட்டிருக்கும், எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து முஃமின்களும் அதைப் படிப்பார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),



நூல்: முஸ்லிம் 5223



அவன் இஸ்லாமிய வட்டத்தில் உள்ளதாக தன்னைக் கூறிக் கொள்ள மாட்டான் என்பதற்கு அவன் செய்யும் வாதமும் சான்றாக உள்ளது.



அவன் தன்னைக் கடவுள் என வாதிடுவான்.



'தஜ்ஜால் என்பவன் ஒரு கண் ஊனமுற்றவன். உங்களது இறைவன் ஒரு கண் ஊனமுற்றவனல்லவன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127, 7131, 7407, 7408



தஜ்ஜாலின் அற்புதங்கள்.



இஸ்லாத்தின் பெயரைக் கூறாமல் எவ்வாறு முஸ்லிம்களை வழிகெடுக்க இயலும்? என்ற ஐயம் தோன்றலாம்.



தன்னைக் கடவுள் என்று சாதிக்கும் வகையில் அவன் பிரமிப்பூட்டும் அற்புதங்களைச் செய்வான்.



ஒன்றிரண்டு தந்திர வேலைகளைச் செய்வோரின் வலையில் அப்பாவி முஸ்லிம்கள் அநேகர் விழுந்து ஈமானை இழந்து வருவதை இன்றைக்கும் நாம் காண்கிறோம். அவர்களையெல்லாம் விட மிகப் பெரும் அற்புதங்களை நிகழ்த்தும் தஜ்ஜாலின் வலையில் முஸ்லிம்கள் விழுவது ஆச்சரியத்திற்குரியது அல்ல. அவன் நிகழ்த்தும் அற்புதங்கள் எத்தகையதாக இருக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.



'மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும், முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது (பயிர்களை) முளைப்பிக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),



நூல்: முஸ்லிம் 5228



'பின்னர் மக்களிடம் வந்து (தன்னைக் கடவுள் என்று ஏற்குமாறு) அழைப்பு விடுவான். அவனை ஏற்க மக்கள் மறுப்பார் கள். அவர்களை விட்டு அவன் விலகி விடுவான். காலையில் அம்மக்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவார்கள்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),



நூல்: முஸ்லிம் 5228.



பாழடைந்த இடத்துக்குச் சென்று 'உன்னுடைய புதையல்களை வெளிப்படுத்து'' என்று கூறுவான். அதன் புதையல்கள் தேனீக்களைப் போன்று அவனைப் பின் தொடரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



நூல் : முஸ்லிம் 5228



'திடகாத்திரமான ஒரு இளைஞனை அவன் அழைத்து வாளால் இரண்டு துண்டுகளாக வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான். உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டு பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூற்கள்: முஸ்லிம் 5228



ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜால் பற்றி நீண்ட விளக்கம் தந்தார்கள். மதீனாவின் நுழைவாயிலுக்கு வருவது அவனுக்கு விலக்கப்பட்டுள்ளது. எனவே மதீனாவிற்கு வெளியில் உள்ள உவர் நிலத்திற்கு வருவான். ஒரு நாள் சிறந்த மனிதர் ஒருவர் அவனிடம் செல்வார். 'அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எச்சரிக்கை செய்த தஜ்ஜால் நீ தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று அவர் கூறுவார். 'இவரைக் கொன்று விட்டு பின்னர் நான் உயிர்ப்பித்தால் (நான் கடவுள் என்ற) இவ்விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்களா?'' என்று அவன் கேட்பான். அவர்கள் மாட்டோம் என்பார்கள். உடனே அவரை அவன் கொல்வான். பின்னர் உயிர்ப்பிப்பான். உயிர்ப்பிக்கப்பட்டதும் அந்த நல்ல மனிதர் 'முன்பிருந்ததை விட இன்னும் தெளிவாக நான் இருக்கிறேன்'' என்று கூறுவார். உடனே தஜ்ஜால் அவரைக் கொல்ல நினைப்பான். அவனால் அது இயலாது என்று நபி(ஸல்) கூறினார்கள்.



நூல்: புகாரி 7132, 1882



இறந்தவர்களை அவன் உயிர்ப்பிப்பது ஒரே ஒரு தடவை தான் நிகழும். இதனால் தான் இரண்டாம் முறை அந்த நல்ல மனிதரை அவனால் கொல்ல இயலவில்லை.



இறந்தவர்களை உயிர்ப்பிப்பது என்பது ஒரே தடவை மட்டுமே அவனால் செய்ய இயலும்; தொடர்ந்து செய்ய இயலாது.



ஒரு மனிதனைக் கொன்று அவனை உயிர்ப்பிப்பான். மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அன்ஸாரித் தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.



நூல்: அஹ்மத் 22573



தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும் நீக்குவான். இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பான். மக்களிடம் 'நானே உங்கள் இறைவன்'' என்பான். 'யாரேனும் நீ தான் என் இறைவன்'' என்று கூறினால் அவன் சோதனையில் தோற்று விட்டான். 'அல்லாஹ் தான் என் இறைவன்'' என்று யார் கூறி அதிலேயே மரணித்து விடுகிறாரோ அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டு விட்டார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி),



நூல்: அஹ்மத் 19292



அவனைப் பின்பற்றியவர்கள் தவிர ஏனைய மக்கள் மிகவும் வறுமையில் இருக்கும் போது அவனிடம் மலை போல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான். இன்னொன்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் நரகமாகும். அவன் நரகம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் சொர்க்கமாகும். மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். மக்கள் பார்க்கும் வகையில் மழை பெய்யும். 'இதைக் கடவுளைத் தவிர வேறு யாரும் செய்ய முடியுமா? என்று கேட்பான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),



நூல்: அஹ்மத் 14426



தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதனை நெருப்பு என்று காண்கிறார்களோ அது சுவை மிக்க குளிர்ந்த நீராகும். உங்களில் யாரேனும் இந்த நிலையை அடைந்தால் நெருப்பு என்று காண்பதில் விழட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),



நூல்: புகாரி 7130



தஜ்ஜால் வாழும் நாட்கள் எத்தனை?



இவ்வளவு அற்புத சக்தியுடன் வெளிப்படும் தஜ்ஜால் நீண்ட நாட்கள் ஆட்டம் போட முடியாது. வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே அவன் இவ்வுலகில் இருப்பான்.



'தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.



அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),



நூல்: முஸ்லிம் 5228



தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள்.



இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் அவன் சுற்றி வருவான். ஆயினும் சில இடங்களை அவனால் அடைய முடியாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.



மதீனா' நகருக்கு தஜ்ஜால் பற்றிய அச்சம் இல்லை. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),



நூல்: புகாரி 7125



'தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ஷாம்' பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கே தான் அவன் அழிவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),



நூல்: முஸ்லிம் 2450



'இஸ்பஹான் நாட்டு யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) கெட்ட மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். ஷாம் நாட்டில் உள்ள பாலஸ்தீன் நகரின் லுத்' எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா (அலை) இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன் பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா (அலை) இப்பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிமானாக வாழ்வார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),



நூல்: அஹ்மத் 23327



மதீனாவுக்கு மட்டுமின்றி மற்றும் மூன்று இடங்களுக்கும் அவனால் செல்ல முடியாது.



'அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களையும் அவன் அடைவான். மஸ்ஜிதுல் ஹராம், மதீனா வின் மஸ்ஜித், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிகளை அவன் நெருங்க முடியாது'' என்பது நபிமொழி.



நூல்: அஹ்மத் 22571



தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புப் பெறும் வழி.



தஜ்ஜாலின் காலத்தை அடைபவர்கள் அவனிடமிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு இரண்டு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.



தொழுகையில் அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கு விஷயங் களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்று 'தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன்'' என்பதாகும்.



நூல்: புகாரி 833, 1377, 6368, 6375, 6376, 6377



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கற்றுத் தந்துள்ளதால், ஜங்காலமும் தொழுது இந்தப் பிரார்த்தனையைச் செய்து வருபவர்கள் அவனது மாய ஜாலத்தில் மயங்க மாட்டார்கள்; ஈமானை இழக்க மாட்டார்கள்.



தஜ்ஜாலின் வருகைக்கு முன் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை இது. தஜ்ஜாலை நமது காலத்தில் நாம் அடைந்தால் அவனது அற்புதத்தில் மயங்கி ஈமானை இழக்காமலிருக்க கஹ்ப்' அத்தியாத்தின் ஆரம்பப் பகுதியை நாம் ஓதி வர வேண்டும்.



'உங்களில் யாரேனும் அவனை அடைந்தால் கஹ்பு அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை ஓதுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),



நூல்: முஸ்லிம் 5228



தஜ்ஜால் வெளிப்படும் இடம்.



தஜ்ஜால் சிரியாவுக்கும், இராக்குக்கும் இடையே வெளிப்பட்டு வலப்புறமும், இடப்புறமும் விரைந்து செல்வான். 'அல்லாஹ்வின் அடியார் களே! உறுதியாக நில்லுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



நூல் : முஸ்லிம் 5228



மேற்கில் உள்ள குராஸான் என்ற பகுதியிலிருந்து தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



நூல் : திர்மிதீ 2163.

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்