Pages

Wednesday, May 30, 2012

தம்புள்ளை பள்ளிவாசல் ஆக்ரமிப்பும் கோடாரிக் காம்பாய் மாறிப்போன முஸ்லிம் தலைமைகளும்!


தம்புள்ளை பள்ளிவாசல் ஆக்ரமிப்பும்

கோடாரிக் காம்பாய் மாறிப்போன முஸ்லிம் தலைமைகளும்!

மனிதர்களில் ஒருவர்  மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.” (அல்குர்ஆன் 22 : 40)

கடந்த 20/04/2012 ஆம் திகதி இலங்கை முஸ்லிம்களின்  உணர்வுகள் மொத்தமாய் எரிமலையாக்கப்பட்ட தினம்! இலங்கை தேசத்தின் இறைமையை காக்கும் இமைகளாய் வாழ்ந்த முஸ்லிம்களின் இறையில்லம், இனவாதிகளின் ஆக்ரமிப்புக்கும், அடாவடித்தனத்துக்கும் உள்ளாகி, எமது வழிபாட்டு உரிமை தட்டிப்பறிக்கப்பட்ட கரு தினம்! 50 ஆண்டுகளாய் அல்லாஹ்வை வழிபட்டு வந்த, அரச பதிவுகளுடன் கூடிய ஆவணங்களை அத்தாட்சியாய் வைத்துள்ள, ர்  இறையில்லத்தை திட்டமிட்ட சதிவலைகள் மூலம் சில இனவாத சக்திகள் கபளீகரம் செய்ய எத்தனித்த தினம்!

பௌத்தர்களுக்குரிய புனித புமிக்குள் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் அமைய இடமளியோம்!என்ற உண்மைக்குப் புறம்பான வார்த்தை ஜாலங்களை சோடித்து, இனவாத கோஷத்துடன் ஓர் இறையில்லம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை இந்நாட்டின் புர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் மத உரிமையை தட்டிப்பறிக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.

இலங்கை சனநாயக சோசலிஸக் குடியரசின் சட்ட யாப்பின் மத சுதந்திரத்தை வழியுறுத்தும் 10ம் ஷரத்து மற்றும் நிந்தனைகளிலிருந்து பாதுகாக்கும் 11ம் ஷரத்து, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் 15ம் ஷரத்து போன்றவை இவ்வினவாதிகளினால் இங்கு அப்பட்டமாய் மீறப்பட்டுள்ளன.

இரண்டு கோடி என்ற இலங்கையின் சனத்தொகையில் இரண்டாம் பெரும்பான்மையாய் முஸ்லிம்கள் வளர்ந்து வருகிறார்கள் என்ற அண்மைய புள்ளி விபரத்தின் இரகசிய தகவல் கசிவு, மெரிக்க வல்லாதிக்கத்தின் ஜெனீவா பிரேரணையை எதிர்த்து நாட்டின் இறைமையை காப்பதற்காய் தம்புள்ளை நகரில் ஒன்று குழுமிய 1000 க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை, இறையில்ல ஆக்ரமிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன் ஜனாதிபதியை சந்திப்பதற்காய் உலகப்பந்தின் ஒவ்வொரு சாண் நிலப்பரப்பிலிருந்தும் முஸ்லிம்களை கருவறுக்கத் துடிக்கும் ஸியோனிஸ இஸ்ரேலிய தூதுக்குழுவின் இலங்கைக்கான திடீர் விஜயம், தம்புள்ளை ரஜமஹா விகாரையை தளமாக வைத்து இயங்கும் ரங்கிரி F.M இன் தொடர்ந்தேர்ச்சியான இனத்துவேச அறிவிப்புகள், 19ஆம் திகதி இரவே ஆக்ரமிப்பை தடுப்பதற்குண்டான உதவிகள் காவல் நிலைய உயரதிகாரிகளிடம் பள்ளி நிர்வாகிகளினால் கோரப்பட்ட போதும்  பாதுகாப்பு முஸ்தீபுகளில் காவல் நிலையம் கரிசனைகாட்டாமை, காவி உடை தரித்த காடையர் கூட்டம் காட்டு தர்பார் நடாத்திய போதும் காவல் நிலைய காவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தமை, உச்ச நீதிமன்ற அறிவித்தலுடன் மட்டுமே சீல் வைக்க அதிகாரம் உள்ள வணக்கஸ்தலத்தை, நீதி மன்ற உத்தரவின்றி பிரதேச செயலக  அதிகாரியும், காவல் நிலைய DIG யும் சீல் வைத்தமை, இத்தனை சட்ட மீறல்களையும் கண்டித்து எதிர் நடவடிக்கை எடுக்க கடைமைப்பாடுள்ள பிரதமர், நடைபெறாத ஒரு ஒன்று கூடலை நடைபெற்றதாகக் கூறி, குறித்த பள்ளிவாசலை அது அமைந்துள்ள இடத்திலிருந்து அகற்றி வேறு இடத்துக்கு இடமாற்ற அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்தனர் என்று தனது அலுவலக முத்திரையுடன் வெளியிட்ட ஊடக அறிக்கை, பள்ளிவாசல் ஆக்ரமிப்பை எதிர்த்து நடாத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை அரச சார் சக்திகள் தடுப்பதற்குண்டான வழிவகைகளை செய்தமை, பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்த காடையர்களை கைது செய்தல் குறித்து இது வரை ஜனாதிபதியவர்கள் எந்தவொரு அறிக்கையினையும் ஊடகங்களுக்கு விடாது மௌனம் சாதிக்கின்றமை  உள்ளிட்ட குறித்த நிகழ்வுடன் தொடர்புற்ற அனைத்து காரணிகளையும் ஒன்றினைத்து நோக்குகையில், நடந்த சம்வத்திற்கும் ஆளும் அரசிற்கும் நெருங்கிய தொடர்பும் பின்புலமும் உண்டு என்ற வழுவான ஐயப்பாடு முஸ்லிம்களின் ஆழ்மனதில் எழ ஆரம்பித்துள்ளது.

இலங்கை மண்ணின் புர்வீகக் குடிகளில் முஸ்லிம்கள் ஒன்றும் மூன்றாம் தர பிரஜைகளல்லர். இந்நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அபிவிருத்திக்காகவும் உதிரத்தை உரமாய் பாய்ச்சிய கீர்த்திக்குரிய பிரஜைகள் நாம்.தேசப்பற்றுடன் செயலாற்றும் எம்மை நசுக்கி, எம் உரிமைகளை பறித்து, எம் கலாசார முதிசயங்களை அழித்து, எம் இருப்பை இம்மண்ணை விட்டும் இல்லாதொழிக்க நினைத்தால் அது வெரும் பகற்கனவு தான் என்பதை இனத்துவேஷ விஷமிகளின் செவிகளுக்கு உரத்துச் சொல்கிறோம்! அதே சமயம், முஸ்லிம்களின் இருப்பும், ரிமைகளும் கண்னெதிரே களவாடப்படுவதை கண்ட பின்பும், தங்களது அதிகாரக் கதிரைகளை தக்க வைத்துக் கொள்வதற்காய், அரசியல் காய்நகர்த்தி, வார்த்தையில் மட்டும் எனது சமூகம்என்று நீலக்கண்ணீர் வடிக்கும் முஸ்லிம் அரசியல் வேஷதாரிகளின் உண்மை முகம் இந்நிகழ்வுடன் சமுதாயத்திற்கு தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.

மேலும், முஸ்லிம்களின் மார்க்க மற்றும் உலகியல் வழிகாட்டல்களுக்கு நாங்களே ஏகபோக உரிமை கொண்டவர்கள் என்று கருதப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சமூக பிரக்ஞை அற்ற சுயநலத்தனமும், அரச சார்பான பச்சோந்தித்தனமும் வெள்ளிடை மலையாய் வெளிப்பட்டுமுள்ளது. அநீதியை தட்டிக்கேற்க திராணியற்று, அதிகார வீச்சுக்கு முன் பெட்டிப்பாம்பாய் அடங்கி, மார்க்கம் சொல்லாத அடிப்படையில் நோன்பு நோற்று அமைதிகாக்கும் படி ஏவிய ஜம்இய்யதுல் உலமாவின் மார்க்க அறிவை என்னவென்று சொல்வது?

பல்லின சமுதாயத்தவர்கள் தொப்புல் கொடி உறவாய் கூடி வாழும் இலங்கை நாட்டில் ஒவ்வொரு இனத்தவருடைய உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்து வாழும் போதே நல்லிணக்கமும் சமாதானமும் நீடித்து நிலைக்க முடியும். இனங்களுக்கிடையிலான நல்லுறவை சிதைக்கும் இனவாத செயற்பாடுகளை அரசு மற்றும் சிவில் நிறுவனங்கள் உரிய முறையில் நிறைவேற்றத்தவரினால் அதன் விளைவு விபரீதமானதாய் இருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்களின் செவிகளுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வாஞ்சையோடு எடுத்துச் சொல்கிறது. உரியவர்கள் இது குறித்து சிந்திப்பார்களா?

இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைக்கும் இனவாதச் சக்திகள்


இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைக்கும் இனவாதச் சக்திகள்

கிட்டிய கால இடைவெளிக்குள் முஸ்லிம்களின் மூன்றாவது இறையில்லம் இனவாதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளமை, இலங்கை வாழ் முஸ்லிம்களின் எதிர்கால இருப்புக்கு இனவாதிகள் விடுக்கும் மிகப்பெரும் அபாய சமிக்ஞையாகவே கருதவேண்டியுள்ளது. தம்புள்ளை மஸ்ஜிதுல் கைராத்தில் ஆரம்பித்து, குருநாகல் குர்ஆன் மத்ரஸா வரை சென்று, இன்று தெஹிவளை தாருர் ரஹ்மான் இறையாலயத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வரை இறையில்ல ஒழிப்பு நடவடிக்கை நீண்டு செல்வது, இந்நாட்டின் புர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் கலாசார மையங்களை அழித்து, முஸ்லிம்களின் இருப்புக்கான வரலாற்று சுவடுகளை கூட எச்சங்களாய் மிச்சம் வைக்கக் கூடாது என்ற இனவாத சிந்தனையின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலை துள்ளியமாய் எடுத்துக்காட்டுகின்றது.

தொப்புல் கொடி உறவாய் ஒன்றித்து வாழ்ந்து, இலங்கை தேசத்தின் சுதந்திரத்திற்கும் சுபீட்சத்துக்குமாய் அளப்ரிய தொண்டாற்றிய முஸ்லிம்களை கருவறுக்க முயலும் இனவாதக் காடைத்தனம் இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. 1900ஆம் ஆண்டளவில் சிங்கள ஆதிக்கம் இலங்கை மண்ணில் நிறுவப்பட வேண்டும்என்று அநகாரிக தர்மபாலவினால் விதைக்கப்பட்ட முஸ்லிம் விரோத மனப்பான்மை இன்று நீருபுத்த நெருப்பாய் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது.

1915ஆம் ஆண்டு கம்பளையில் முஸ்லிம்களை கருவறுப்பதில் ஆரம்பித்த முஸ்லிம் எதிர்ப்புப் படலம் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதையடுத்து விஷ்பரூபம் எடுக்கலானது. 1974ஆம் ஆண்டு மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராய் தோற்றுவிக்கப்பட்ட இனவன்முறை, 1976ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலில் 7 உயிர்களை காவுகொண்ட காடைத்தனம், 1980ஆம் ஆண்டு கொம்பனித்தெரு பள்ளிவாசலில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சுடு, 1982ஆம் ஆண்டு காலியில் தீக்கிரையாக்கப்பட்ட கடைத்தொகுதிகள், 1983ஆம் ஆண்டு ஜூலைக் கலவரத்தில் பலிகடாவாக்கப்பட்ட 10 க்கு மேற்பட்ட முஸ்லிம் உயிர்கள், 1990 களில் கொதிநிலைக்கு வந்த திக்குவல்லை சம்பவம், தீகவாவி பொன்னன்வெளி வன்முறைகள், ஹிரிப்பிட்டிய பள்ளிவாயல் எரிப்பு, அளுத்கமை இனப்பகைமை, கலகெதர மோதல், வட்டதெனிய கைகலப்பு, திஹாரிய இனமுறுகல், 1999ஆம் ஆண்டு பன்னல எலபடகம பிரதேசத்தில் தீ வைத்து கொழுத்தப்பட்ட சொத்துக்கள், 2001ஆம் ஆண்டு மாவனல்லையில் அரங்கேற்றப்பட்ட இனவன்முறைத் தாக்குதலும் பொருளாதார ஒழிப்பு எத்தனங்களும், 2002ஆம் ஆண்டு பேருவலையில் தூபமிட்டு வளர்க்கப்பட்ட இனமோதல்கள் உள்ளிட்ட முஸ்லிம்களுக்கெதிரான அத்தனை அடாவடித்தனங்களும் இனவாதிகளின் நெறிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் வரலாறு நெடுகிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதனை வௌளிடை மலையாய் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

மாறி மாறி ஆட்சிக்கதிரையில் அமர்ந்த இரு பிரதான கட்சிகளான பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இவைகளுக்கு ஒத்தூதும் வலது சாரி இடது சாரி கட்சிகள் யாவும் முஸ்லிம்களை கருவறுக்கும் பணியினை கையிலெடுக்கத்தவறவில்லை. DS இல் ஆரம்பித்து JR வரைக்கும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பெரும்பான்மை குடியேற்றங்களை நிறுவியதன் மூலம் முஸ்லிம்களின் சனச் செறிவை மட்டுப்படுத்தும் தந்திரோபாயங்கள் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளன. JR இனால் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் விளைவாக வடக்கு - கிழக்கை தாண்டிய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாத அரசியல் வங்குரோத்து நிலை முஸ்லிம்களுக்கு பீடிக்க வழிக்கோலியது. இனவாதத்தின் இச்சங்கிலித் தொடரின் ஒரு கட்டமே இன்று தம்புள்ளையிலும், குருநாகலையிலும், தெஹிவலையிலும் எதிரொலிக்கிறது.

எனவே, முஸ்லிம் சமூகத்தின் வாழ்வுரிமை, வழிபாட்டு உரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமை போன்றவற்றை வென்றெடுப்பதாயின் அதற்கான மாற்றுப்பரிகாரம் என்ன? இருக்கும் ஆட்சியை மாற்றுவது மட்டும் இதற்கு தீர்வாகுமா? வரலாறு அதனை பொய்ப்பித்துவிட்டது. இரண்டாவது பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்த்தால் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நப்பாசையும் இன்று சிலரால் விதைக்கப்பட்டு வருகிறது. 1992 ஆம் ஆண்டு வடபுல மண்ணிலிருந்து வடக்கு தமிழர்களின் தாயகம்என்ற கோஷத்தின் கீழ் முஸ்லிம்களை புர்வீக புமியை விட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அகதிகளாய் துரத்தியடித்து, காத்தான்குடியிலும் ஏராவுரிலும் பல உயிர்களை சுட்டுக்கொன்றது மட்டுமின்றி, வடக்கிலும் மன்னாரிலும் முஸ்லிம்களின் சொந்த இடங்களில் அவர்களை மீள்குடியேற்றுவதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் ஒரு சாராருடன் இணைந்து எம் உரிமைகளை பெறலாம் என்று நினைப்பது அறிவுடைமையாகமாட்டாது.

இன்றைய இவ்வினவாத சுழலில் முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டிய முப்பெரும் சவால்கள் உள்ளன.

1.இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும், பள்ளிவாசல்களின் செயற்பாடுகள் குறித்தும் இனவாத சக்திகளினால் மீடியாக்கள் வாயிலாக பெரும்பான்மை பொது மக்களிடம் பரப்பப்பட்டு வரும் அவதூறுகள் மற்றும் போலிப்பிரசாரங்களுக்கு அறிவார்ந்த விளக்கங்களை வழங்கி, இஸ்லாத்தின் மீதான கறைகளை அகற்றி, முஸ்லிம்கள் பற்றிய நல்லென்னத்தை பெரும்பான்மை மக்களிடம் விதைப்பது.

2.ரிக்கப்படும் அரசியல் மற்றும் மத உரிமைகளை சாத்வீக ரீதியாக வென்றெடுப்பதற்காக, அதிகார கதிரைகளுக்கு விளைபோகாத, இஸ்லாமிய விழுமியங்களை விட்டும் விலகிச்செல்லாத, சமூகப்பற்றுள்ள, அரசியல் சாக்கடையில் வீழ்ந்து தனித்துவம் கரைந்துபோகாத, கட்சி அரசியலுக்கு அப்பால் செயற்படக்கூடிய அரசியல் அழுத்தக் குழுஒன்றினை உருவாக்குதல்.

3.முஸ்லிம் சமூகத்தின் குரலை அனைத்து மட்டங்களிலும் ஓங்கி முழங்கச் செய்யும் விதத்தில் சட்டவல்லுணர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொடர்புடக துறை விற்பண்ணர்கள் போன்றோரை திட்டமிட்டு உருவாக்குவதோடு, எமக்கென்று ஒரு நாளாந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செனல் ஒன்றை உடனடியாய் உருவாக்குதல்.

முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளும், புரவலர்களும், சமூக ஆர்வலர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் இது குறித்து சிந்திப்பார்களா? அல்லது பழைய குருடி கதவை திறடிஎன்ற உறங்கு நிலைக்கு சென்று குரட்டைவிட்டு தூங்குவார்களா?